பாமவினர் கைது- காவல் நிலையம் முற்றுகை
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே திமுக- பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் பாமகவினரை போலீஸார் ஒரு தலைப்பட்சமாக கைது செய்ததை கண்டித்து பாமகவைச் சேர்ந்தவர்கள் மங்களாபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அடுத்து உள்ளது திம்மநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப். இதன் அருகே கடந்த 17 ம் தேதி தீபாவளி அன்று பாமக, மற்றும் திமுகவைச் சேர்ந்த சிலர் அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்த போது இருதரப்பினரிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் இரு தரப்பைச் சேர்ந்தோரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட இரு தரப்பை சேர்ந்த நபர்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பாமகவைச் சேர்ந்த விஜயகுமார் (23), முத்துசாமி (33) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
திமுகவின் தூண்டுதலின் பேரில் பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கத்து பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில் அக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மங்களபுரம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம் டி.எஸ்.பி.மாதவன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்து முற்றுகை போராட்டத்தை பாமகவினர் கைவிட்டனர்.