போலீஸுடன் மோதல் - சரமாரியாக கல்வீசித் தாக்கிய பொதுமக்கள்
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் வக்போர்டு ஜமாத்தும், மற்றொரு ஜமாத்தும் இயங்கி வருகிறது. இங்குள்ள ஏதாவது ஒரு ஜமாத்தில் திருமண கட்டண ரசீது பெற்ற பின்பு திருமண நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், முகம்மது ரிச்சயர் என்பவர் இரு ஜமாத்திலும் திருமண கட்டண ரசீதை பெற்றுள்ளார். இதை வக்போர்டு ஜமாத்தார்கள் ஆட்சேபித்து வாலிநோக்கம் போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக பைசூல் கருணை, அப்துல்ரகுமான் மற்றும் வக்போர்டு ஜமாத்தார்களை நேரடியாக வரவழைத்து வாலிநோக்கம் போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில், பைசூல் கருணையின் மனைவி ஜெபஸ்தியா பேகம் 20 பெண்கள் உள்ளிட்ட 40 பேருடன் சேர்ந்து வாலிநோக்கம் போலீஸ்ஸ்டேஷனை முற்றுகையிட்டு பைசூல் கருணையையும், அப்துல் ரகுமானையும் விடுவிக்க கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் போலீசார் மீது கல்லை வீசித் தாக்கினர். இதில், போலீசார் முருகேசன், திருமுருகன் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக பைசுல்கருணை, அப்துல்ரகுமான், சாகுல் ஹமீது, முகம்மது சகாபுதீன், புரோஸ்கான் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 40 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.