தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் எங்கே...?

Subscribe to Oneindia Tamil

Mullai Periyar dam
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மனித தர்மமே இல்லாத வகையில் மத்திய காங்கிரஸ் அரசும், கேரள மாநில அரசும் நடந்து வருவது தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

ஒரு சாதாரண அணைப் பிரச்சினையை இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்றி வருகிறது கேரளா. அணை உடைய வாய்ப்பில்லை, நல்ல வலுவுடன் நிபுணர்கள் கூறி விட்ட பின்னரும், அணை உடைந்து விடும், பல லட்சம் பேர் செத்துப் போய் விடுவார்கள் என்று தேவையி்ல்லாமல் அலறுகிறது, கிராபிக்ஸ் போட்டுக் காட்டி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது.

இந்தியா என்ற கட்டமைப்பை கட்டறுக்கும் வேலையில் கேரளா ஈடுபட்டுள்ளது. இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு குண்டு வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது கேரள அரசு.

சற்றும் மனசாட்சி இல்லாமல், முற்றிலும் குறுக்கு வழியில் புதிய அணைக்கான ஆய்வுக்கான அனுமதியை, படு கேவலமான வழியில் வாங்கி விட்ட கித்தாப்பில் இருக்கிறது கேரளா.

இதுகுறித்து தமிழக மக்களும், எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் கத்தியும், கதறியும் பார்த்தும் கூட கண்டும் காணாமல் இருக்கிறது இந்திய அரசு. சோனியா காந்தியும் சரி, பிரதமரும் சரி, மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் இதுகுறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இது இந்தியாவின் பிரச்சினை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

முதல்வர் கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஆரம்பத்திலிருந்தே கூட்டணி தர்மத்தை மதித்து மிக மிக அமைதி காத்து வருகிறார். காங்கிரஸ் மனம் கோணி விடக் கூடாது என்று கவனமாக வார்த்தைகளை எடுத்து வைக்கிறார்.

இப்போதும் கூட ஜெய்ராம் ரமேஷ்தான் தவறு செய்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். ஆனால், பாமக தலைவர் ராமதாஸ் சொல்வது போல ஜெய்ராம் ஒரு பகடைக்காய் தான். ஒரு இணையமைச்சரான அவர் இந்த முடிவை எடுக்க காங்கிரஸ் தலைமையின் அனுமதி நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ்காரர்கள் கூட மறுக்க முடியாது.

தங்கபாலுக்கள், இளங்கோவன்கள், சிதம்பரங்கள் வேண்டுமானால் மறுக்கலாம். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் இதை மறுக்க மாட்டார்கள்.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசும் மத்திய அரசும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து போனதால் தான் முதல்வர் கருணாநிதிக்கு இப்படிப்பட்ட நிலை வந்துள்ளது.

இலங்கையில் புலிகளைக் கொல்கிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அந்த நாடு கொன்று குவிந்த அந்த கடைசி நாட்களில் மத்திய அரசும் கருணாநிதியும் பேசிய பேச்சுக்கள், போட்ட நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தேர்தல்- வெற்றி- பதவி என்ற குறுகிய மன நிலையே அதற்குக் காரணம்.

அது இலங்கை விவகாரம்.. அதை வைத்து இனி ஓட்டு வாங்க ஏதுமில்லை என்ற நம்பிக்கையி்ல் காங்கிரஸ் சொன்னதற்கு எல்லாம் திமுக தலையாட்டியது.

ஆனால், கேரள விவகாரம் புதிது. இதை வைத்து அதிமுகவும் எதிர்க் கட்சிகளும் தன்னை மடக்கி விட முடியும் என்பதை உணர்ந்து தான் இப்போது ஜெய்ராம் ரமேஷுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை சோனியாவுக்கும் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எதிராகத் தான் திமுக நடத்த வேண்டுமே தவிர, ஜெய்ராம் ரமேஷுக்கு எதிராக போராட்டம் என்று கூறுவது மிகப் பெரிய கேலிக் கூத்து.

இதன்மூலம் பிரதமர், சோனியாவைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி முயல்வதாகக் கூடக் கருதலாம். காரணம், அவர்களுக்குத் தெரியாமல் ரமேஷ் கேரளாவுக்கு அனுமதி தந்துவிட்டார் என்று பின்னால் பேச வசதியாக இருக்குமே.

ஜெய்ராம் ரமேஷை எதிர்த்துக் கண்டனக் கூட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டாலாவது பிரதமரும் சோனியாவும் ஏதாவது செய்கிறார்களா என்று திமுக பார்த்துக் கொண்டுள்ளது. அவர்கள் ஏதாவது உறுதிமொழி தந்தால் திமுகவின் போராட்டமே வாபஸ் பெறப்படலாம்.

கடந்த அக்டோபர் 8ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு இதுவரை பிரதமரிடமிருந்து பதிலே வரவில்லையாம். அந்த அளவுக்குத் தான் திமுகவை காங்கிரஸ் தலைமை சமீபகாலமாக நடத்த ஆரம்பித்துள்ளது.

இதற்கு தேர்தல்களில் தொடர்ந்து கிடைத்து வரும் வெற்றிகள் ஒரு காரணம். இன்னொரு காரணம், கேரளா லாபி.

அடுத்த காரணம், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தை விட கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள்தான் முக்கியம். காரணம் அங்குதான் அதற்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது.

முதல்வர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் மிகத் துணிச்சலாக, மத்திய அரசையும், காங்கிரஸையும் மிரள வைக்கும் வகையில் அதிரடியாக செயல்பட வேண்டும்.

இல்லாவிட்டால், திமுகவையும் காங்கிரசோடு சேர்த்து தமிழக மக்கள் தண்டிக்கும் காலம் நிச்சயம் வரும்.

சரி. இந்த தமிழக காங்கிரஸ்காரங்க எல்லாம எங்கே...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+