தமிழர் மறு குடியேற்றம்-இந்தியா மகிழ்ச்சி!
நியூயார்க்: இலங்கையில் தமிழர் மறுகுடியேற்ற நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதை விரைவுபடுத்தினால் நல்லது என்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கெளர் கூறியுள்ளார்.
நியூயார்க் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இதை விரைவுபடுத்துமாறு நாங்கள் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.
இன்னும் சில நாட்களில் இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்குள் மனிதாபிமான நடவடிக்கைகளை விரைவுபடுததுமாறு இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
மழைக்காலம் வந்தால் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கொள்ள அங்கு போதிய மருத்துவமனை வசதியும் இல்லை. எனவே அதற்குள் முகாம்களில் இருப்பவர்களை இடம் மாற்றுவது நல்லது. அவர்கள் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
இலங்கைக்கு சென்ற 10 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவின் பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தான் சொன்னபடி நடந்து வருகிறது. வாரந்தோறும் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு மறுகுடியேற்றம் செய்து வருகிறது.
நான் அக்டோபர் 16ம் தேதி இலங்கை சென்றிருந்தபோது கூட அன்றைய தினம் 2500 தமிழர்கள் திரும்ப அனுப்பப்பட்டு வந்தனர். விரைவில் 50 ஆயிரம் பேரை இலங்கை அரசு மறுகுடியேற்றம் செய்து விடும். இலங்கை சொன்னபடி செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார் கெளர்.