ராஜினாமா செய்து வசுந்தரா தரும் புதிய நெருக்கடி!
கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.
ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் தேசிய அளவிலான தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்நாத் சிங், அத்வானி, ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மட்டும் எந்தப் பொறுப்புகளில் இருந்தும் விலகாததால் தானும் பதவி விலக மறுத்து வந்தார் வசுந்தரா.
இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பாஜகவில் இரு கோஷ்டிகள் உருவாகி மோதிக் கொண்டன. இந் நிலையில் ஜஸ்வந்த் விவகாரம் வெடித்தது. பாஜக விவகாரங்களி்ல் ஆர்எஸ்எஸ் நேரடியாகத் தலையிட்டது. வசுந்தரா விவகாரத்தை கிடப்பில் போடச் சொன்னது.
இதையடு்த்து ராஜ்நாத் சிங் கோஷ்டி அமைதி காத்தது. இந் நிலையில் 3 வாரங்களுக்கு முன் கட்சியின் உயர் மட்டக் குழு கூடி வசுந்தரா விவகாரத்தை விவாதிக்க திட்டமிட்டது. ஆனால், அக் கூட்டத்தை சில முக்கிய தலைவர்கள் புறக்கணித்ததால் கூட்டம் நடக்கவில்லை.
அதே நேரத்தில் வசுந்தராவிடம் பேசி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு சுஷ்மா சுவராஜுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், சுஷ்மா, வெங்கையா நாயுடு ஆகியோர் அழைத்தும் டெல்லிக்கு வர மறுத்தார். தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் உடல் நிலை சரியான பின்னர் வருவதாகவும் தெரிவித்துவிட்டார்.
இதனால் பாஜக இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தது. இந் நிலையில் 3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதால் இதற்கு ராஜ்நாத் சிங், அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லி, நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இன்று தனது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வசுந்தரா. இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் தந்தார்.
ராஜஸ்தான் தோல்விக்கு தான் பொறுப்பேற்றது போல 3 மாநில தேர்தல் தோல்விக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டும் வகையிலேயே அவர் இந்த நேரம் பார்த்து ராஜினாமா செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.