கள்ளக்காதல்-குத்துச் சண்டை வீரர் வெட்டி கொலை
சென்னை: கள்ளக்காதலி தொடர்பாக ஏற்பட்ட கடும் மோதலில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திரு.வி.க.நகர் காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (23). கட்டட வேலைகளுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த குட்டை சுரேஷ், ஜானி என்கிற ஜானகிராமன், ராஜேஷ் ஆகியோர் இவரது நண்பர்கள். இவர்களும் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரன் கட்டுமஸ்தான உடலுடன் இருப்பார். பாக்ஸிங் பயிற்சி பெற்றுள்ளார். தனது உடல் கவர்ச்சியை வைத்து ஏராளமான பெண்களுடன் பழகி வந்தார் சந்திரன்.
இந்த நிலையில் ராஜேஷுக்கும், ரம்யா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இது கள்ளக்காதல். இவரது வீடு கே.கே.நகரில் உள்ளது. ரம்யாவுக்குக் கல்யாணமாகி விட்டது. இந்த நிலையில் திரு.வி.க.நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வரும்போது ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டது.
ராஜேஷ் மட்டுமல்லாது அவரது நண்பர்களுடனும் உல்லாசமாக இருப்பாராம் ரம்யா. இந்த நிலையில்தான் சந்திரன் தனது வலையில் ரம்யாவை வீழ்த்தினார். சந்திரன் மீது கொண்ட மோகத்தால் ராஜேஷ் கோஷ்டியை புறக்கணிக்க ஆரம்பித்தார் ரம்யா.
இதனால் ராஜேஷ் கோஷ்டி வெகுண்டது. ஏற்கனவே பல பெண்களுடன் சுற்றுகிறாய், எங்களுக்கு ரம்யா மட்டும்தான் கிடைத்துள்ளார். இந்த நிலையில், ரம்யாவையம் தட்டிப் பறிப்பது நியாயமா என்று நியாய, தர்மம் பேசியுள்ளனர்.
ஆனால் நானாக ரம்யாவை வளைக்கவில்லை. அவள்தான் என்னைக் காதலிக்கிறாள், விலக முடியாது என்று கூறி விட்டார் சந்திரன்.
இதனால் ராஜேஷ் கோஷ்டி டென்ஷனானது. சந்திரனைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்தனர்.
நேற்று முன்தினம் இரவு திரு.வி.க.நகர் சமூகநலக்கூடம் அருகே ராஜேஷ், அவரது நண்பர்கள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது சந்திரன் அந்த வழியாக சென்றார். அவரையும் மது அருந்தும்படி அழைத்தனர். அவர்களுடைய சதித் திட்டம் தெரியாமல், சந்திரன் அவர்களோடு உட்கார்ந்து மது அருந்தினார்.
போதையில் சந்திரன் மிதக்க ஆரம்பித்ததும், 3 பேரும் சேர்ந்து சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். சந்திரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சந்திரனை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரன் இறந்தார்.
சமீபத்தில்தான் திரு.வி.க.நகரில் பங்க் ராஜ் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் கள்ளக்காதல் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதால் திரு.வி.க.நகர் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சந்திரனைக் கொன்ற குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷை போலீசார் தேடி வருகிறார்கள்.