'காபிபோசா' சட்டத்தில் சர்வதேச கடத்தல்காரர் கைது
சென்னை: சென்னையில் பிரபல சர்வதேச கடத்தல்காரர் கைதானார். இவரை மும்பையில் உள்ள வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். காபிபோசா சட்டத்தின் கீ்ழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர் (32). சென்னை அமைந்தகரையில் வசித்து வந்தார். சர்வதேச அளவில் பெருமளவில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு ஹாங்காங்கில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கடத்தி வந்தபோது மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார். மும்பை போலீசார் இவரை கைது செய்து வழக்கு போட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்துவிட்டார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இவரை காபிபோசா' சட்டத்தின் கீழ் கைது செய்ய மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டது. சென்னையில் தங்கியிருந்ததால் மகாராஷ்டிர மாநில போலீசார் இது தொடர்பான கைது வாரண்டை சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகைதீன் அப்துல் காதரை கைது செய்ய தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டுக்கும் வராமல் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு முகைதீன் அப்துல்காதர் அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டுக்கு ரகசியமாக வந்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அப்துல் காதரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். உடனடியாக அவர் ரயில் மூலம் நாசிக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.