ஜெயலலிதாவை சந்தித்தார் வைகோ
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்ட ஜெயலலிதாவை சந்தி்க்க முடியாமல் அவரது கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் தடுமாறி வந்தனர். இடதுசாரிகள், பாமக ஆகியவை
அந்தக் கூட்டணியை விட்டும் வெளியே வந்துவிட்டன.
ஆனால், வைகோவுக்கு வேறு கதி இல்லை. இதனால் மரியாதை இருக்கிறதோ, இல்லையோ அந்தக் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந் நிலையில் சமீபத்தல் கொட நாட்டை விட்டு சென்னைக்கு வந்த ஜெயலலிதாவை நேற்று அவரத போயஸ் கார்டன் இல்லத்தில் வைகோ சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவ்வளவுதான். தேர்தலுக்கு பிறகு 2 முறை சந்தித்துள்ளேன். கணேசமூர்த்தி எம்.பி.யை அழைத்து வந்தும் சந்தித்தேன். கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கம் தானே.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உள்ளது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை அமல்படுத்த முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார்.
அப்போது, மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தந்து கொண்டிருந்தது. கேரள அரசின் வஞ்சகத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மாறாக, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி தவறான தகவலைக் கொடுத்து வருகிறார். இந்த பிரச்சினையில் தமிழக அரசு கடமை தவறிவிட்டது.
கிடைக்கும்போது வாய்ப்பை விட்டுவிட்டு, தற்போது பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது தும்பைவிட்டு வாலை பிடிக்கும் கதையாகும் என்றார் வைகோ.
பொதுக்குழு-நிர்வாகிகளுடன் ஜெ. ஆலோசனை
இந் நிலையில் 28ம தேதி நடக்கவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் குறித்து போயஸ் கார்டனில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செங்கோட்டையன், பொன்னையன், ஜெயக்குமார், மைத்ரேயன், பாலகங்கா, சுலோசனா சம்பத், முத்துசாமி, வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக மாநில அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்:
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் இதுவரை 23 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 22 மாவட்டங்களில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23ம் தேதி முதல் நடத்தப்படும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் தலைமையிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications