கலெக்டர் இருக்கும்போது தாசில்தாரை கண்டித்து போராட்டமா..?- விஜயகாந்த்
சென்னை: மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, ஒரு அமைச்சரை மட்டும் குறைகூறி கண்டனக் கூட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இருக்கும் போது தாசில்தாரை கண்டித்து போராட்டம் நடத்துவது போல இது இருக்கிறது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்தலாம் என்று 27-2-2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் 2006 மார்ச் மாதத்தில் கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொன்டு வந்து அணையின் உயரத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று அறிவித்து விட்டது. இதன் மூலம் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் கடமையை மத்திய அரசு தட்டிக் கழித்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல் இருக்கும் கேரள அரசின் செயலை மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்து வருகிறது.
அணை பலம் வாய்ந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது தொழில்நுட்ப வல்லுநர்கள்தானே தவிர, கேரள அரசியல்வாதிகள் அல்ல.
இந்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்துள்ளார். இதுபற்றி தமிழக அரசின் கருத்தையோ, அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விவரங்களையோ அறிந்து கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. அந்த நிலைமைக்கு தமிழகத்தை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோல மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை மட்டும் தனிமைப்படுத்தி கண்டன கூட்டம் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். யாரை ஏமாற்றுவதற்காக இந்த நாடகத்தை அவர் நடத்துகிறார் என்பது புரியவில்லை.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, ஒரு அமைச்சரை மட்டும் குறைகூறி கண்டனக் கூட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இருக்கும் போது தாசில்தாரை கண்டித்து போராட்டம் நடத்துவது போல இது இருக்கிறது.
இந்திய அரசு தன் கைவசம் என்று சொல்லிக் கொள்ளும் முதல்வரைப் பார்த்து எத்தனை நாளைக்கு இந்த நாடகம் என்று கேட்கத் தோன்றுகிறது. மத்திய அரசில் இருப்பதால் என்ன லாபம்? இல்லையென்றால் என்ன நஷ்டம்? என்பதை முதல்வர் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.