சோமாலியா-24 இந்தியர்களுடன் இன்னொரு கப்பல் கடத்தல்
கோலாலம்பூர்: 24 இந்தியர்கள் இருந்த கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
22,000 டன் எடை கொண்ட சரக்குகளுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. அல் காலிக்.
இந்தக் கப்பலில் 26 பேர் இருப்பதாகவும், அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இருவர் பர்மியர்கள் என்றும் நேட்டோ அமைப்பின் கொள்ளைத் தடுப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் லண்டனில் தெரிவித்துள்ளார்.
அல் காலிக் கப்பலை கொள்ளையர்கள் கடத்திச் சென்றபோது அந்தக் கடல் பகுதியில், நேடோ ரோந்துக் கப்பல் இல்லை. நேட்டோ கப்பல் இல்லாத நேரமாக பார்த்து இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
செஷல்ஸ் நாட்டுக்கு 180 கடல் மைல் தொலைவில் கடத்தல் நடந்துள்ளது.
இந்தக் கப்பல், பனாமா நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்தது.
இதேபோல 32,000 எடையுடன் கூடிய சரக்குகளுடன் வந்த இத்தாலிய சரக்குக் கப்பல் ஜோலி ரோஸோ-வையும் கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியுறவே அவர்கள் திரும்பிப் போய் விட்டனர்.