புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு!

அமெரிக்காவில் செட்டிலான இலங்கைவாசி, உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவர் ராஜ் ராஜரத்னம் சமீபத்தில் அமெரிக்க எஃப் பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவர் மீது நியூஜெர்ஸியில் வசிக்கும் சேர்ந்த 30 இலங்கையர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 2000 ஆண்டு தொடங்கி 2007 -ம் ஆண்டு வரை ராஜ்ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நிதியுதவி அளித்திருப்பதாகவும், இந்த நன்கொடைகளின் ஆதரவில் புலிகள் இயக்கம் இலங்கைக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்திய குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் தொடரப்பட்டுள்ளது.
மனித இனத்துக்கு எதிரான போருக்கு உதவியவர் என்ற வகையில் ராஜ் ராஜரத்னம் தண்டிக்கப்பட வேண்டும் என இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு ராஜ்ரத்னம் நிதி உதவி அளித்ததற்கு எந்த நேரடிச் சான்றும் கிடையாது. மேலும் அவர் பெயரும் நிதி அளித்தோர் பட்டியலில் இல்லை. 'பி எனும் தனி நபர்' அளித்த நிதி என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி உதவி வழங்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் தடை செய்யப்படாத இயக்கமாகவே இருந்தது தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
ஆகவே ராஜ்ரத்னம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும், அவரை எப்படியாவது தங்கள் பிடிக்குள் கொண்டுவர இலங்கை செய்யும் சதி இது என்றும் ராஜ்ரத்னம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications