ஸ்பெக்ட்ரம் ஊழல்-சென்னையிலும் சிபிஐ ரெய்ட்!
3 நாட்களுக்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கை பதிவு செய்ததது. இதைத் தொடர்ந்து அதிரடியாக அமைச்சர் ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய டெல்லி அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந் நிலையில் நேற்று 2வது நாளாக ரெய்டு தொடர்ந்தது. தொலைத் தொடர்புத்துறையின் சில இயக்குனரகங்கள், 10 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 19 அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்தது.
இதில் 10 தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகங்களும் அடங்கும்.
8 நகரங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் எந்தத் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் அல்லது தனியார் தொலைபேசி நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது என்ற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
டெல்லி, சென்னை தவிர மும்பை, ஜெய்ப்பூர், நொய்டா, குர்கான், அகமதாபாத், மொகாலி ஆகிய நகரங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து அடையாளம் குறிப்பிடாத அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
ஊழல் செய்தது, ஊழலுக்கு சதித் திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுக்களை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்துள்ளது.
இதனால் தொலைத் தொடர்புத் துறையில் பரபரப்பு கூடியுள்ளது.