கூப்பிடவில்லை..அதனால் போகவில்லை-திருமா
சென்னை: பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற எனக்கு அழைப்பு வரவில்லை. இதனால் தான அந்தக் குழுவில் நான் இடம் பெறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
5 நாட்கள் பயணமாக இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து அறிக்கை தந்தது.
ஆனால், இலங்கைக்குச் சென்று வந்த குழுவில் இடம் பெற்ற திருமாவளவன், பிரதமரை சந்தித்த குழுவில் இடம் பெறவில்லை.
காங்கிரஸை விமர்சிக்கும் அவரை காங்கிரஸ் தலைமை விரும்பாததால் அவரை திமுக அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படும் நிலையில் இது குறித்து திருமாவளவன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கப் போகிறோம் என்று அழைப்பு இல்லாததால் தான் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை. மற்றப்படி பிரதமரை சந்திக்க செல்லாததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.
கருத்து கூற விரும்பவில்லை-தங்கபாலு:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,
இலங்கை சென்று வந்த காங்கிரஸ், திமுக எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.
மத்திய அரசு வழங்கும் ரூ.1,000 கோடி முழுவதும் இந்திய அரசின் கண்காணிப்பிலேயே செலவழிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். இலங்கை தமிழர்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். இலங்கை அதிபருடன் பேசி அவரது சகோதரர் தலைமையில் ஒரு குழு இந்தியா வருமாறு கேட்டுக் கொண்டார்.
விரைவில் இலங்கை அரசின் குழுவினர் வர உள்ளனர். ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை தேவையான மாற்றங்களுடன் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு பாடுபடும்.
திருமாவளவன் பிரதமரை சந்தித்த குழுவில் இடம் பெறாததற்கு காரணம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேவை திருமாவளவன் சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு இங்கு அவர் விமர்சனம் செய்வது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க சதி நடக்கிறது. நேற்று என்னுடைய மெகா டி.வி. அலுவலகம், வீடு, சத்தியமூர்த்தி பவன் ஆகியவற்றுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. அதன் பிறகு என் வீட்டுக்கு பேக்ஸ் மூலமாகவும் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தடை செய்யப்பட்ட இயக்கங்களையோ, கட்சிகளையோ எப்போதும் ஆதரித்ததில்லை. இனியும் ஆதரிக்காது.
தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழம் அமைப்போம் என்று பேக்ஸ் அனுப்பி இருக்கிறார்கள். யார் அனுப்பினார்கள் என்று தெரியாது என்றார்.