இலங்கை போர்க் குற்றம்: விசாரணை அவசியமே- ஐ.நா
நியூயார்க்: இலங்கையில் இறுதி யுத்தம் என்ற பெயரில் இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை கண்டிப்பாக விசாரித்தாக வேண்டும். காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து விசாரிக்கப்பட்டதைப் போலவே, வன்னி யுத்தம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
வட இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கவில்லை என்பது குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படாதது ஏன்? என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்ட பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் கேள்வி எழுப்பினார்.
முன்பு காஸாவில் நடந்த யுத்தம் குறித்து ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடந்த விசாரணை போல, வன்னியில் இலங்கை படையினரும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விசாரணை அவசியம் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கை யுத்தம் குறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என அமெரிக்கா நேற்று வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக, இப்போது ஐநாவும் அதே போன்றதொரு கோரிக்கையை வைத்துள்ளது இலங்கையை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications