வேலை கிடைக்காத வேதனை- எம்சிஏ படித்த பெண் தற்கொலை
சென்னை: பொருத்தமான வேலை கிடைக்காத வேதனையில் 24 வயதேயான எம்.சி.ஏ படித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன சேலத்தைச் சேர்ந்தவர் ஜே. ரம்யா. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் எச்.ஆர். எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆனால் இந்த வேலையில் அவருக்கு பிடித்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இருந்து வந்துள்ள ரம்யா, நேற்று அண்ணா நகரில் தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது உறவினர் முத்துராமன் என்பவர் கூறுகையில், எச்.ஆர். வேலையில் திருப்தி இல்லாமல் இருந்து வந்தார் ரம்யா. அந்த வேலையையும் சமீபத்தில் விட்டு விட்டார். வேறு வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இந்த வேதனையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.
தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரம்யா. அவருடன் தங்கியுள்ள அனுஷா என்பவர் ஷாப்பிங் போய் விட்டு அறைக்குத் திரும்பியபோது அறை உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது ரம்யா தொங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்து அலறினார்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டனர்.
சேலம் வைஷ்ணவா கல்லூரியில் கடந்த ஆண்டுதான் எம்.சி.ஏ. முடித்தார் ரம்யா. இதையடுத்து வேலை தேடி சென்னைக்கு வந்தார்.
ரம்யாவின் தந்தை ஜெயராமன், இந்து அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
ரம்யாவின் உறவினரான கிருஷ்ணக்குமார் என்பவர் பேசுகையில், வெள்ளிக்கிழமை ரம்யா ஜெயராமனுடன் போனில் பேசினார். அப்போது அப்செட் ஆக இருந்தார். நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கூறினார். அதற்குள் இந்த முடிவை எடுத்து விட்டார் என்றார்.