அருணாச்சல் குறித்த சீனாவின் வாதம் அர்த்தமற்றது - முதல்வர் டோர்ஜி கந்து
அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. முதல்வர் டோர்ஜி கந்து, 2 வது முறையாக அப்பதவியை இன்று ஏற்றார்.
அவருக்கு ஆளுநர் ஜே.ஜே.சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவின்போது அனைத்து புதிய எம்.எல்.ஏக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் அபாங், காங்கிரஸ் பார்வையாளர் நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கந்து, சீனாவை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதுதொடர்பான சீனாவின் வாதம் அர்த்தமற்றது, கேலிக்குரியது, கண்டனத்துக்குரியது.
வட கிழக்கு மாநிலங்களிலேயே அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் மட்டும்தான், இந்தி மொழி இணைப்பு மொழியாக பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடியினர் மத்தியில் நடைமுறையில் உள்ளது.
தலாய் லாமா அருணாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 8ம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவரை வரவேற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எனது அரசு முழு கவனம் செலுத்தும். குறிப்பாக அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரப் பிரிவின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை தரப்படும்.
அருணாச்சல் பிரதேச அமைச்சரவை விவராம் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என்றார் கந்து.