எஸ்.பி. முகாம்-போதையில் வந்த போலீஸ்காரர்!
தூத்துக்குடி: மாவட்ட எஸ்.பி. நடத்திய பாதுகாப்பு பயிற்சி முகாமுக்கு போதையில் தள்ளாடியபடி வந்த போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை வஉசி கல்லூரியில் எஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
முகாமில் மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீசார் வந்திருந்தனர். இவர்களின் ஒரு போலீஸ்காரர் தடுமாறிய நிலையில் காணப்பட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த எஸ்பி செந்தில்குமார் அருகே அழைத்து விசாரித்தார். இதில் அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சாம் பிரைட் என்பது தெரிய வந்தது. உடனே தென்பாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் அவரை ஒப்படைத்த எஸ்பி அவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து சாம்பிரைட் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற்று வழக்கு தொடரப்பட்டது.












Click it and Unblock the Notifications