மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்
சென்னை: மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்று கோரி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தோளில் பச்சைத் துண்டு சகிதம் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
உலக அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் காய்கறி கத்திரிக்காய். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்து நுழைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த கத்திரிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது.
நாம் சாப்பிட்டால் நமது உடலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும். இந்தியாவில் 2500 ரக கத்திரிக்காய் இருக்கும் போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் வந்தால் மற்ற கத்தரிக் காய்கள் அனைத்தும் அழிந்து விடும்.
கேரளா, ஒரிசா, சதீஸ்கர் மாநிலங்களில் மரபணு மாற்ற கத்திரிக்காய் தேவை இல்லை என்று கூறி விட்டனர். தமிழக முதல்வரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது போதாது.
தமிழக சட்டசபை கூடும் போது, மரபணு மாற்று கத்தரிக்காய் தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். நமது எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.