ஆள் கடத்தல் -அடிதடியில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா நீக்கம் - மாவட்ட பொறுப்பாளரானார் தந்தை
சென்னை: ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை என்.கே.கே. பெரியசாமி ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆள் கடத்தல், அடைத்து வைத்து மிரட்டுதல், அடியாட்களை அனுப்பி தாக்கியது, நில அபகரிப்பு என சீரியஸான பல்வேறு புகார்கள் சிக்கினார் ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் சிவபாலன் என்பவருக்கும், ராஜாவுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. சிவபாலனை தனது வீட்டுக்கு அழைத்து ராஜாவும், அவரது 2வது மனைவி உள்ளிட்டோரும் தாக்கிப் படுகாயப்படுத்தியதாக சிவபாலன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வந்துதான் தன்னைக் காப்பாற்றியதாகவும அவர் கூறினார்.
ஆனால் சிவபாலன் தன்னையும், மனைவியையும் வெட்டினார் என்று ராஜா புகார் கொடுத்தார். இந்த வழக்கும் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா சில காலமாக கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மீறி நடந்துகொண்டதால் அவர் ஈரோடு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இன்று (25) முதல் விலக்கி வைக்கப்படுகிறார்.
ஈரோடு மாவட்ட தி.மு.க.வை தொடர்ந்து செம்மையாக நடத்துவதற்காக கட்சியின் விவசாய அணி தலைவர் என்.கே.கே.பெரியசாமி, ஈரோடு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் துணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி தோழர்கள் அனைவரும் பொறுப்பாளரோடும், துணைப் பொறுப்பாளரோடும் ஒத்துழைத்து, கட்சி பணிகளை ஆற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெரியசாமி, ராஜாவின் தந்தை ஆவார். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரை பதவியில் இருந்த திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.












Click it and Unblock the Notifications