கருணாநிதி பற்றிய பாடம்: மத கலவரம் ஏற்படும்-இந்து முன்னணி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி பற்றிய பாடப் பிரிவைச் சென்னைப் பல்கலைக்கழகம் வைக்கப் போவதாக அறிவிப்பு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கருணாநிதி தன்னை ஒரு நாத்திகவாதி என்று கூறிக் கொண்டு இந்து மதத்தையும், சமய நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கேலி பேசியவர். அவரது பாடத்தை திணிக்க நினைப்பதன் மூலம் இந்து விரோத பிரச்சாரத்தை மறைமுகமாக மாணவர்களிடையே கொண்டு செல்ல எண்ணுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
அப்படிச் செய்வார்களேயானால் அது நாட்டின் பொது அமைதியைக் கெடுப்பதோடு மத வெறுப்புணர்வு ஏற்பட்டு மதக்கலவரம் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறோம்.
அரசியல்வாதிகள் தாங்கள் அரசு கட்டிலில் ஏறியவுடன் தங்களது 'வீரபிரதாபங்களை' வாழ்க்கையைப் பாடமாக மாணவர்களிடம் திணிப்பதும், அரசு மாறும்போது அது தூக்கியெறியப்படுவதும் தமிழகத்தில் சகஜமான விஷயமாக இருக்கிறது.
இவர்களது நடவடிக்கையால் மாணவர்களிடையே நாட்டுக்குழைத்த உண்மையான தலைவர்கள் மீதும் கூட மதிப்பு குறைகிறது. இது ஜனநாயகத்திற்கும், தேசபக்திக்கும் ஆபத்தானது.
எனவே தமிழக முதல்வர் கருணாநிதி பற்றிய பாடப் பிரிவினை அறிவிப்பு அளவிலேயே சென்னைப் பல்கலைக்கழகம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
இதை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நடைமுறைப்படுத்த முனைந்தால் இதன் ஆபத்தை மக்களிடையே பிரச்சாரம் செய்து இந்து முன்னணி எதிர்த்துப் போராடும் என்று கூறியுள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி. மீது தாக்கு:
இந் நிலையில் இன்று வேலூர் வந்த இராம.கோபாலன் நிருபர்களிடம் பேசுகையில்,
வேலூர் மாவட்ட திமுக அவைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான முகமது சகியின் மகள் டாக்டர் சபீகாவுக்கும், வடி.முகமது வதுத் என்பவருக்கும் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திருமணம் நடந்துள்ளது.
முகமது சகியின் மருமகன் பெயர் வடிவேல். அவர் முதலியார் இனத்தைச் சேர்ந்தவர். முகமது சகியின் மகள் சபீகா, வடிவேலை காதலித்துள்ளார். இதற்காக வடிவேலுவை மதமாற்றம் செய்ய வைத்து, இந்தத் திருமணத்தை முடித்துள்ளார் முகமது சகி.
மதமாற்றம் செய்து திருமணம் முடித்து வைத்தது கண்டிக்கத்தக்கது. சாதி மதம் இல்லை என்று சொல்லும் திமுகவில், ஒரு முன்னாள் எம்பி ஒரு இந்துவை மதமாற்றம் செய்து திருமணம் முடித்துள்ளார். இதுதான் திமுகவின் லட்சணமா என்றார்.