அணை: கருணாநிதியின் அந்தர் பல்டி-வைகோ

தேனி மாவட்ட மதிமுக தொண்டரின் இல்லத் திருமணத்தை நடத்தி வைகோ பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான பாதுகாப்பு உத்தரவாதத்தை உடைத்து எரிவதற்கு கேரள அரசு முயல்கிறது. அதற்கு மத்திய அரசும் துணை போகிறது.
1979ம் ஆண்டிலிருந்து அணைக்கு ஆபத்து என்றும் அதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கேரளத்தில் திட்டமிட்ட விஷமத்தனமான பொய் பிரசாரத்தினை கேரள அரசு செய்து வருகிறது.
2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது திமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை.
கேரளத்தில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் இந்திய பிரமதரை 5 முறை சந்தித்து அணை உடைந்துவிடும் என்று இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பச்சைப் பொய்யை கூறினார். அதற்காக அவர் கொடுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அணை உடைவது போலவும், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரில் மூழ்கி சாவது போலவும் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை வடிமைத்து லட்சக்கணக்கான சி.டிக்கள் தயாரித்து மாநிலம் முழுவதும் இலவசமாக வழங்கினார்கள்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். பசுமையாக இருக்கும் தென் தமிழகம் பாலைவனமாக மாறும்.
பெரியாறு அணை விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தும்பை விட்டு வாலை பிடிக்கிறார். மத்திய அமைச்சரை எதிர்த்து மதுரையில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 2 தினங்களில் அந்தர்பல்டி அடித்து தற்போது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டு உள்ளது. இது மக்களை ஏமாற்றும் கபட நாடகம்.
மத்தியில் தேவையான அமைச்சர் பதவிகளை பெறுவதற்கு டெல்லியில் முகாமிட்டு கேட்டு பெற்றவர்கள் பெரியாறு அணை விஷயத்தில் டெல்லி சென்று பிரதமரை வற்புறுத்த ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?.
மதிமுகவில் தன்னலம் கருதாது உழைக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தை விட்டு விலகி சென்றவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள் என்றார் வைகோ.
கருணாநிதிக்கு துணிவு இல்லை-பழ. நெடுமாறன்:
இந் நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம் வேதனையளிக்கிறது. கேரள முதல் மந்திரி எதிர்கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து அவர்களது தரப்பு நியாயத்தை முன்வைத்து புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டார்.
ஆனால் தமிழகத்தில் நியாயங்களை எடுத்து சொல்ல கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற உயர்மட்டக்குழு கூடி மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் தலைமையில் உயர்மட்ட குழு கூடி புதிய அணை ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.
இதனை கேரளா அமைச்சர் பிரேமசந்திரன் வெளிப்படையாக அறிவித்த பின்னரும் தமிழக முதல்வர் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்.
ஆனால் மக்களை திசை திருப்புவதற்காக மதுரையில் வருகிற 1ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டிய முதல்வர் மதுரையில் முச்சந்தியில் கூட்டம் போட்டு பேசுவதால் எந்தப் பலனும் இல்லை.
மத்திய மந்திரிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் என கூறிவிட்டு இப்போது கேரள அரசுக்கு எதிரான போராட்டம் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசை எதிர்க்க கருணாநிதிக்கு துணிவு இல்லை என்பது தெளிவாகி விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications