தமிழனுக்காக குரல் கொடுப்போம்-சீமான்
திருச்செந்தூர்: தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை பிரச்சினை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் தமிழர் அமைப்பில் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசினார்.
திருச்செந்தூரில் நாம் தமிழர் அமைப்பு சார்பில் எழுச்சி கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு நிறுவனர் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழர்கள் சாதி, மதங்களால் பிளவுப்பட்டு கிடக்கின்றனர். தமிழர்களின் இன, மொழி விடுதலைக்காக நாம் தமிழர் அமைப்பு 2010ம் ஆண்டு மே 17ல் அரசியல் இயக்கமாக மாற்றப்பட உள்ளது.
இது மாறுபட்ட அரசியல் கட்சியாக செயல்படும். சட்ட கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இதில் இணைந்து வருகின்றனர்.
இலங்கையில் முள்வேலி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க தமிழகத்திலுள்ள காங்கிரஸ், திமுக எம்பிக்கள் சென்று வந்தனர். அங்கு சில தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்
தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைத்தால்தான் ஏற்றுக் கொள்ள முடியும். தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தவே நாம் தமிழர் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த அமைப்பில் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்கள். தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் இயக்கமாக விளங்கும் என்றார் அவர்.
பொதுக்கூட்டம்:
இந் நிலையில் அவர் தொடங்கியுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தீலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்துகிறார் சீமான்.