ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி தமிழர் பாதுகாப்பு இயக்கம் பிரசார பயணம்
சென்னை: இலங்கையில் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று பிரசாரப் பயணம் தொடங்கியது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில்,
இலங்கையில் நடைபெறும் போரை விடுதலைப் போராக உலக நாடுகள் இப்போதுதான் நினைக்கத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் 68 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ராஜபக்சே சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். காலம் கடந்து ஏற்பட்டாலும் இது ஒரு நல்ல திருப்பம்.
இலங்கையில் நடைபெறும் விடுதலைப் போரை இந்தியா மட்டும்தான் அங்கீகரிக்க மறுத்து வருகிறது. உலக வரை படத்தில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்து விடக்கூடாது என்று சில சக்திகள் தடுக்கின்றன.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து அவர்களின் ரத்தத்தில் புரண்ட ராஜபக்சேவுடன் தமிழக எம்.பி.க்கள் கைகுலுக்கி பரிசு பெற்று வந்தார்கள்.
இதற்கு எப்படி மனம் வந்தது. இலங்கையில் இருந்து திரும்பிய பிறகு ஒரு அறிக்கையை கொடுத்ததாக சொன்னார்கள். அந்த அறிக்கையை வெளியிடுங்கள். தமிழக மக்கள் அறியட்டும்.
ஈழப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முடிந்து விட்டதாக தமிழர்களும் சொல்லவில்லை. இலங்கை அரசும் இந்தியாவும்தான் போர் முடிந்து விட்டதாக சொல்கிறது. ஈழப்போர் தொடரும். இனி நடப்பது இறுதிப்போராக இருக்கும். ஈழத்தின் தமிழ் மண்ணில் இருந்து சிங்களர்கள் வெளியேற வேண்டும். ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே எங்கள் பயணம் தொடர்கிறது என்றார்.
பிரசார பயணம் அமைந்தகரை, அண்ணாநகர் வழியாக அம்பத்தூர் சென்றடைந்தது. பின்னர் தொடர்ந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு வழியாக இன்று இரவு திண்டிவனத்தை அடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகிறார்.
நாளை திண்டிவனத்திலிருந்து டாக்டர் ராமதாஸ் தனது பிரசாரப் பயணத்தைத் தொடருகிறார். 29ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை முடிக்கிறார்.
வைகோ தலைமையில் ...
இதேபோல, கோவையில் இருந்து பழ. நெடுமாறன் தலைமையிலும், ராமேசுவரத்தில் இருந்து வைகோ தலைமையிலும், கன்னியாகுமரியில் இருந்து நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று பிரசார பயணங்கள் தொடங்கியன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
1983ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை.
இச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர் மூளும். அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார்.
இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்கள். நமது மீனவர்களை சிங்களர்களுடன் சேர்ந்து சீனர்களும் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் சீனா, தற்போது ராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் நெருக்கடி தரத் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது என்றார்.
இந்த அனைத்து குழுவினரும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார்கள். 29ம் தேதி அனைத்து குழுவினரும் திருச்சி சென்றடைகின்றனர்.
திருச்சியில் பிரமாண்ட கூட்டம்...
திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், வைகோ, பழ. நெடுமாறன், தா. பாண்டியன், நல்லக்கண்ணு உள்பட தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications