பாகிஸ்தான் செல்ல வேண்டாம்-இந்தியா
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருத்வாராக்களுக்கு இந்திய சீக்கியர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந் நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,
குருத்வாராக்கள் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தி்ல் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து வருவதால் அங்கு செல்ல வேண்டாம். நிலைமை சரியாகும் வரை பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி-பாக்
இந் நிலையில் பாகிஸ்தானை சீர்குலைப்பதற்காக தலிபான் தீவிரவாதிகளுக்கு சிலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதில் இந்தியாவும் ஒன்று என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகளுடன் பாகிஸ்தான் படைகளும் இணைந்து தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பாகி்ஸ்தான் முன் வைத்துள்ளது. ரஹ்மான் கூறுகையில்,
தலிபான்களுக்கு இந்திய நிதியுதவி குறித்து முழு விவரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. என்னுடைய குற்றச்சாட்டை இந்தியாவின் உள்துறை அமைச்சர் மறுத்தால், அவருடைய கருத்தை நிராகரிப்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
மேலும் ஒரு தலீபான் நகரம் பிடிபட்டது:
இந் நிலையில் பாகிஸ்தானில் தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில் தலிபான் தலைவரான ஹகிமுல்லாவின் சொந்த ஊரான கொட்காய் ஏற்கனவே பிடிபட்டுவிட்டது.
இதைத்தொடர்ந்து டர்கோனா நராய் என்ற நகரையும், அந்த இடத்தில் உள்ள மலை உச்சியையும் ராணுவம் கைப்பற்றியது. இதை பிடிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் கிட்டத்தட்ட 16 மணி நேரம் தலிபான்களுடன் சண்டை போட்டது.
நாளை மன்மோகன் காஷ்மீர் பயணம்:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் நாளை முதல் 2 நாட்கள் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.