தமிழ் அகதிகள் வருகையை எதிர்த்து இந்தோனேசியாவில் போராட்டம்
கிஜாங் (இந்தோனேசியா): இந்தோனேசியாவுக்கு இலங்கைத் தமிழர்களை அனுமதிக்கக் கூடாது என்று கோரி சில இளைஞர்கள் அங்கு போராட்டம் நடத்தினர்.
ஆஸ்திரேலியாவை நோக்கி ஏராளமான இலங்கைத் தமிழர்கள் அதிகளாக சென்று கொண்டுள்ளனர். இவர்களை இந்தோனேசிய கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது. அதேபோல ஆஸ்திரேலிய சுங்கத் துறையினரும், தமிழர்கள் வரும் படகுகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தற்போது மேற்கு ஜாவாவில், 260க்கும் மேற்பட்ட தமிழர்களுடன் ஒரு படகு கடந்த சில நாட்களாக நின்று கொண்டுள்ளது. தங்களுக்கு யாரேனும் புகலிடம் கொடுத்தால்தான் படகை விட்டு இறங்குவோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கிஜாங் என்ற இடத்தில் கிஜாங் இளைஞர்கள் அமைப்பு என்ற அமைப்பின் சார்பி்ல் 10 இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
அதில், இலங்கை அகதிகளை அனுமதிக்கக் கூடாது. ரியாவ் தீவை அகதிகள் புகலிடமாக மாற்றக் கூடாது என்று கோஷமிட்டனர்.
போராட்டத்தை நடத்திய லா ஓடே அப்துல் முக்மீன் என்பவர் கூறுகையில், வெளிநாட்டினர் வந்து தஞ்சமடையும் நாடு இந்தோனேசியா அல்ல. எனவே யாரையும் இங்கு அனுமதிக்கக் கூடாது.
இலங்கைத் தமிழர்கள், ஆஸ்திரேலியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஏன் இங்கு கொண்டு வர வேண்டும்? என்றார்.
ஓசியானிக் வைகிங் என்ற கப்பல் மூலம் வந்த 78 தமிழர்களை ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தது. இவர்கள் தற்போது கிஜாங்கில் உள்ள டெம்போரா லாட் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம் நடந்தது.