ஐ.ஓ.சி: காண்ட்ராக்டர்கள் மோதல்-நொறுங்கிய கார்கள்
நாகப்பட்டினம்: நாகையில் ஐ.ஓ.சி நிறுவனத்தில் கான்ட்ராக்ட் எடுப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மூலம் எடுக்கப்படும் கச்சா எண்ணெய், சி.பி.சி.எல்.நிறுவனத்தில் சுத்தகரிப்பு செய்யப்பட்டு, நாகையை அடுத்த முட்டம் கிராமத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கிடங்கில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்-களுக்கும், மண்ணெண்ணெய், நாப்தா, வேஸ்ட் ஆயில் ஆகியவை தூத்துக்குடி-க்கும் தினசரி 200 டேங்கர் லாரிகள் மூலம் சப்பளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஐ.ஓ.சி.கிடங்கில் இருந்து லாரியில் எரிபொருள் நிரப்பும் பணியில் 110 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கான டெண்டர் எடுப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அப்பாராஜ் என்பவரின் பிரதிநிதியாக வந்த ஜெயக்குமார், மனோகர் தரப்பினருக்கும், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.
இதில் இரண்டு கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், சுப்பையா பிள்ளை (65) என்பவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.