அதிகாரிகள் காலில் விழ சத்தியாகிரக குழுவுக்கு அனுமதி மறுப்பு
வேலூர்: லஞ்ச ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சத்தியாகிரகக் குழுவினர் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து தங்களது கோரிக்கையை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணவேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சத்தியாகிரக பிரச்சார குழுவிவைச் சேர்ந்த ஐந்து பேர் மணி என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில், வரும் 2015ல் இந்தியாவை வல்லரசு நாடு ஆக்க நாட்டில் உள்ள லஞ்சம், ஜாதிப்பிரச்னைகளை ஒழிக்கவும் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல தரப்பட்ட மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் காலில் விழுந்து வணங்கி கேட்டு வருகின்றோம். எங்கள் குழுவுக்கு, "சத்தியாகிரகம்' என பெயரிட்டுள்ளோம்.
இதே போல லஞ்சத்தை ஒழிக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் காலில் விழுந்து வணங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜேந்திரன், இந்த நோட்டீஸை அனைத்து அதிகாரிகளுக்கும் நானே கொடுத்து விடுகின்றேன். ஆனால், இங்கு யாருடைய காலிலும் விழ வேண்டாம் என்றார்.
இதையடுத்து சத்தியாகிரகக் குழுவினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.