'நவீன நெற்றிக்கண்' ஆசிரியர் மணி கைது
சென்னை: 'நவீன நெற்றிக்கண்' பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். மணி, அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு சர்வதேச பத்திரிகைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நவீன நெற்றிக்கண் இதழில், சமீபத்தில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, காண்டிராக்டர் சுரேஷ் ஆகியோர் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் சாலை காண்டிராக்ட் பணியில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
காண்டிராக்ட் கொடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சதவீதத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும், அதேபோல தென் மாவட்டங்களில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுரேஷ் பரிந்துரைக்கும் நபர்களே இடம் பெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சுரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அக்டோபர் 25ம் தேதி ஆசிரியர் மணி கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கைதுக்கு சர்வதேச பத்திரிகைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச பத்திரிக்கையாளர் கழகத்தின் வாரிய உறுப்பினரும், இந்து நாளிதழின் எடிட்டருமான என்.ரவி கூறுகையில், மணி மீது ஜாமீனில் வெளி வர முடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது, சட்டத்தைப் பயன்படுத்தி அவரை ஒடுக்க தமிழக அரசு முயல்வதையே காட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, சர்வதேச பத்திரிக்கையாளர் சம்மேளனமும் மணி கைதைக் கண்டித்துள்ளது.
சிறையில் சித்திரவதை...
இந்த நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட மணி அங்கு தன்னை சித்திரவதை செய்ததாக கூறிய புகாரைத் தொடர்ந்து அவர் தற்போது சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.