சென்னையிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அக்கம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0611) மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 4-ந் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் ஆகியவை இந்த சிறப்பு ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
சென்டிரல்-திருச்செந்தூர் இடையே வாரம் தோறும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0659) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அக்டோபர் 31-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதே போல் மறுமார்க்கத்தில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.