லண்டனில் தமிழக வாலிபர் அடித்துக் கொலை- இனவெறித் தாக்குதலா?
சேலம்: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. படித்த இளைஞர், லண்டனில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை தமிழகத்திற்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆரியூர் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். விவசாயி.
இவரது மனைவி பெயர் பாப்பாயி. இவர்களுக்கு சிவகாமி, விஜயா, அருள்கொடி, கவிதா என்ற 4 மகள்களும், சரவணகுமார் (26) என்ற ஒரு மகனும் இருந்தனர்.
சரவணகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. எம்.பி.ஏ. படித்துள்ள சரவணகுமார் , லண்டனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி அன்று, வேலைக்கு சென்று திரும்பிய சரவணகுமாரை, மர்ம ஆசாமிகள் சிலர் அடித்துக்கொலை செய்து விட்டதாக அங்கிருந்து தகவல்கள் வந்தது. இதை அறிந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்லப்பன் கூறுகையில்,
தீபாவளி அன்று இரவு சரவணகுமாரின் நண்பர்கள் சிலர் எங்களது வீட்டிற்கு லண்டனில் இருந்து டெலிபோன் செய்தனர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்று திரும்பிய சரவணகுமாரை, மர்ம நபர்கள் 3 பேர் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை திருடி சென்று விட்டதாக கூறினர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சரவணகுமாரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும், பின்னர் அறைக்கு கொண்டுவந்தபோது, வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வந்து சரவணகுமார் இறந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்டதும் எங்கள் இதயமே நின்று விட்டது என்று கூறி அழுதார்.
சரவணகுமார் உடலை, இங்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சரவணக்குமாரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.