டெல்லி: 'பிச்சைக்காரர்களை அகற்ற கூடாது'
டெல்லி: தலைநகர் டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைளை அது கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியை விட்டு சொந்த மாநிலங்களுக்குப் போகுமாறு பிச்சைக்காரர்களை விரட்டிய டெல்லி அரசின் செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்றும் அது கடுமையாக சாடியுள்ளது. டெல்லி அரசின் செயலுக்கும், மும்பையிலிருந்து வட மாநிலத்தவரை வெளியேற்ற மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா செய்த செயலுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்றும் அது வர்ணித்துள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முரளீதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், வறுமை என்பது குற்றமல்லல. பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது.
அப்படிச் செய்வது மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும். பிறகு உங்களுக்கும் (டெல்லி அரசுக்கும்), மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
ஒரு குற்றவாளி தலைநகரில் தங்கியிருக்கலாம், வாழலாம், குற்றச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடலாம். ஆனால் உயிர் வாழ்வதற்காக பிச்சை எடுப்போர் இந்த நகரில் வாழக் கூடாது என்பது விசித்திரமாக உள்ளது என்றும் டெல்லி அரசுக்கு கடும் சூடு போட்டுள்ளது உயர்நீதிமன்றம்.