ஸ்வான் டெலிகாம்-ராசா தொடர்பு: சிபிஐ விசாரிக்க ஜெ கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக ரூ.60,000 கோடிக்கும் அதிகமாக நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இதில் உள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் தொலைதொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மிகப்பெரிய ஊழலுக்கு தலைமை தாங்கிய மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா, பதவி விலக முடியாது என அறிவித்துள்ளார். இதனால் விசாரணை பாரபட்சமற்ற முறையில் நடக்குமா என்பது சந்தேகமே.
அவர் அவ்வாறு அறிவித்ததில் வியப்பேதும் இல்லை. திமுகவில் இருக்கும் ஒருவரிடமிருந்து யாரும் எவ்வித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது.
பிரமதர் மன்மோகன் சிங், ராசாவை ராஜிநாமா செய்யச் சொல்லவில்லை. இது ஆச்சர்யம் அளிக்கிறது. தனக்கு முன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய அதே முறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும், பிரதமரின் அனுமதியுடன்தான் அனைத்தும் நடைபெற்றதாகவும் ராசா பகிரங்கமாக கூறியுள்ளார்.
இதை மன்மோகன் சிங் ஒப்புக் கொள்கிறாரா?. அதனால்தான் ராசா ராஜிநாமா செய்ய வேண்டாமென்று நினைக்கிறாரா?.
அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்கினால்தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நான் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். இல்லையெனில், மத்திய அமைச்சர் ராசா சொல்வதை கேட்கக்கூடிய சில அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது பணியை நிறுத்தி விடும்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் யாரும் பயனடையவில்லை எனில், அதை ஏன் அடிமாட்டு விலைக்கு அரசு விற்றது?, யாராவது ஆதாயம் அடைந்தார்கள் என்றால், யார் அந்த பயனாளிகள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு எந்த அர்த்தமும் இருக்காது.
தொலை தொடர்பு துறையின் சில அதிகாரிகளிடம் மட்டுமின்றி, அத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு குறித்தும் சிபிஐ ஆழமாக விசாரிக்க வேண்டும்.
2004ல் ராசாவுக்கு நெருக்கமானவர்களால் வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையதாக விளங்கும் 'கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' கட்டுமான நிறுவனத்திற்கும், 'ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும்.
இதில் உள்ள எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், ராசாவை மத்திய அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வர வேண்டும். இதை மன்மோகன் சிங் செய்வாரா? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications