தமிழக அதிகாரிகளை தடுத்த கேரள வனத்துறை
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பணிகளை மேற்கொள்ள விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள வனத்துறையினர் மீண்டும் தடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் 999 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அணையின் நீர்மட்டத்தை அறியவும், பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் தமிழக பொதுப்பணித்துறை- நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தினமும் பெரியாறு அணைக்கு செல்வது வழக்கம்.
தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்த படம் பிடிப்பதும் வழக்கம். அதற்காக புகைப்பட கலைஞரையும் உடன் அழைத்து செல்வர்.
நேற்று வழக்கம்போல பெரியாறு அணைக்கு செல்ல செயற் பொறியாளர் ராஜேஷ், 2 உதவி செயற் பொறியாளர்கள், புகைப்பட கலைஞர் ஆகியோர் தேக்கடி படகுத்துறைக்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். தற்போது கேரள அரசு சார்பில் முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே எடுக்கும் பணி நடந்து வருவதால், நீங்கள் போகக் கூடாது என்றனர்.
மேலும் புதிய அணைக்கான சர்வே நடப்பதை படம் பிடிக்கவே நீங்கள் செல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினர்.
அணையின் நீர்மட்டத்தை அறியவே *செல்வதாக தமிழக அதிகாரிகள் கூறியும் கேரள வனத்துறையினர் அதனை ஏற்க மறுத்து தடுத்து நிறுத்தினர்.
பல மணி நேரம் கேட்டும் விடாததால் தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இது தொடர்பாக அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications