ஜெய்ப்பூரில் 3 வது நாளாக எரியும் தீ-ரூ.400 கோடி இழப்பு
பிரமாண்டமான ஒரு பெட்ரோல் டேங்குகில் பிடித்த தீ 13 டேங்குகளுக்கும் பரவியது. பல லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த டேங்குகள் மூன்றாவது நாளாக இன்றும் எரிந்து கொண்டுள்ளன.
4 டேங்குகளில் எரிபொருள் முழுவதும் எரிந்துவிட்டதால் அவற்றில் தீ அணைந்துவிட்டது. ஆனால், மற்ற டேங்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டுள்ளன.
தீ அணைந்துவிட்ட டேங்குகளுக்கு அருகில் இருந்து இன்று 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாநில தீயணைப்புப் படையால் தீயை அணைக்க முடியாததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஆனால், அவர்களாலும் ஏதும் செய்ய முடியவில்லை. இதனால் எரிபொருள் எல்லாம் தீர்ந்து தீ தானே அணைந்தால் தான் என்ற நிலை உள்ளது.
இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். 160 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஜெய்ப்பூர் நகரை சுற்றி சுமார் 10 கிமீ தூரத்துக்குக் கரும் புகை பரவியுள்ளது. சேதத்தை தவிர்க்க 3 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
தீ விபத்து காரணமாக ரூ. 400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்தள்ளது. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படு்ம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.