வக்கீல்களின் நடத்தை-தீர்ப்பில் உயர்நீதிமன்றம் 'சூடு'
சென்னை: நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள சென்னை உயர்நீதி்மன்றத் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ள அதே நேரத்தில் வக்கீல்களின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் விமர்சிக்கத் தவறவில்லை.
இதுகுறித்து அவர்களின் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை, ஒழுங்கு குறித்த சில வெளிப்படையான உண்மைகளை நாம் புறக்கணித்து விட முடியாது. அவர்கள் திருந்த வேண்டும்.
தரம் தாழ்ந்து போவது, தகுதிகள் இல்லாதது, பாரபட்சமாக நடந்து கொள்வது போன்ற வக்கீல்களின் குணத்தால், ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து போய் விடுகிறது.
தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று பெரிய அளவில் பேசுகிறோம். ஆனால் கடந்த காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் எத்தனை முறை நீதிமன்றப் புறக்கணிப்புகளை வக்கீல்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதைப் பார்த்தால் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதை வக்கீல்கள் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
வக்கீல்களின் வேலைநிறுத்தம் வழக்கமான ஒரு விஷயமாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தீர்ப்புகள் கூறப்படுவதும் பாதிப்படைகிறது.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல், வழக்குகளுக்குப் பாதிப்பில்லாமல், கோர்ட் நேரத்தை வீணடிக்காத வகையில் வேறு வழிகளில் போராட்டங்களை நடத்த முடியும். தங்களது கோரிக்கைகளை யாரிடம் வெளிப்படுத்த வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் அதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கவனத்தை மட்டும் ஈர்க்கும் வகையில் போராட்டங்களை செய்யக் கூடாதா?.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் சக உறுப்பினர்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணை போக மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் உறுதியளித்திருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.
வக்கீல்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. தேவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்யலாம்.
சமூகத்தில் புரையோடிப் போயுள்ள தார்மீக நெறிகளின் சீ்ர்குலைவு, வழக்கறிஞர்களையும் பாதித்துள்ளது. ஒரு தொழிலில் ஈடுபடும்போது அதில் அங்கீகாரம் பெறும் வகையில் உழைக்க வேண்டியது, செயல்பட வேண்டியது அவசியம். மாறாக, பெயருக்கு அந்தத் தொழிலில் இருப்பது சரியல்ல.
தங்களது தொழிலின் முக்கியத்துவத்தை, மையக் கருத்தை பல வக்கீல்கள் மறந்து போய் விடுகிறார்கள். தங்களது சுய முன்னேற்றத்துக்காக வக்கீல் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. மாறாக, சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் கோர்ட்டுகளுக்கும், மக்களுக்கும் உதவியாக அவர்கள் இருக்க வேண்டும்.
வருங்காலத்தில், பார் நிர்வாகிகள், புதிய வக்கீல்களுக்கு திறம்பட பணியாற்றத் தேவையான பயிற்சிகளை அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆசைப்படுகிறோம்.
வக்கீல் தொழிலின் புனிதம், தார்மீக நெறிமுறைகள், தரம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு பார் கவுன்சிலுக்கு உண்டு.
கோர்ட் வளாகத்திற்குள் அரசியல் செயல்பாடுகளோ, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களோ நடத்தக் கூடாது என்று 2006ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. அதை வக்கீல்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.