நவம்பர் மாதம் முழுக்க நிலையற்ற வர்த்தகம்தான்!
இந்த நவம்பர் மாதம் முழுக்கவே இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது என்றும் நிலையற்ற வர்த்தகம் காரணமாக சற்று இழப்புகளும் முதலீட்டாளர்களுக்கு நேரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளது.
17000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் கடந்த இரு வாரங்களாக பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதனால் மீண்டும் இறங்குமுகத்துக்குச் சென்ற சென்செக்ஸ், இப்போது 16000 புள்ளிகளுக்கும் கீழே தள்ளாடிக் கொண்டுள்ளது.
இந்த ஊசலாட்ட நிலை நவம்பர் மாதம் முழுக்க தொடரும் என்ரும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரிகத்துள்ளனர்.
ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தினேஷ் தாக்கர் கூறுகையில், 5000 புள்ளிகளுக்குக் கீழ்தான் நிப்டியின் வர்த்தகம் இருக்கும் என்றும், 4600 புள்ளிகள் வரை அது இறங்கிச் செல்லும். அதே நேரம் சென்செக்ஸ் 15800 புள்ளிகள் வரை இறங்கும் என்றும் கூறினார். ஆனால் இது பங்குச் சந்தை பலவீனமடைந்துவிட்டதைக் குறிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைக்குக் காரணம் அமெரிக்க டாலரின் பலவீனமான போக்குதான் என்றும், டாலர் மீண்டும் வலுவடைந்தால் இந்தியா போன்ற ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டெண் ஏறுமுகம் காட்டும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர, முதலீட்டாளர்களின் ஆர்வம் கடந்த அக்டோபரில் இருந்தது போல இப்போது இல்லை. இதுவும் நவம்பர் மாத வர்த்தகத்தில் எதிரொலிக்குமாம்.
டெலிகாம் பங்குகளில் முதலீடு செய்வது இந்த காலத்தில் சற்று பலனளிக்கும். ஆனால் ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்வது குறுகிய கால நோக்கில் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.