இலங்கை அகதிகளின் அவல நிலை - முதல்வரையே இருட்டில் வைத்த அதிகாரிகள்!
சென்னை: இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள அவல நிலை குறித்து முதல்வர் கருணாநிதிக்கே தெரியாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர் அதிகாரிகள் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் படு மோசமான நிலை நிலவுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் அகதிகள் முகாம்களின் அவல நிலை குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் இன்று அவரது தலைமையில் அவசர கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் தமிழ் அகதிகளின் மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கும்போது அகதிகள் முகாம்களின் நிலை குறித்து அவருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கவே இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவல நிலை நிலவுகிறது. இதுகுறித்து ஏடுகளில் விரிவாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
கெளரவமான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. பல்வேறு குறைகளுடன் மனப் புழுக்கத்தில் அகதிகள் தவித்து வருவதும் அம்பலமாகியுள்ளு.
இதுகுறித்து தமிழ் வார இதழ் ஒன்று விரிவான செய்தியை வெளியிட்டு அனைவரையும் கலங்கடித்துள்ளது. இதைப் பார்த்த பின்னர்தான் தமிழக அரசு விழித்துக் கொண்டுள்ளது. முதல்வரும் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் கூட பல்வேறு இதழ்கள் அகதிகளின் அவலம் குறித்த செய்திகளை வெளியிட்டுதான் வந்தன. ஆனால் அதை உரிய அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்று தெரிகிறது. மேலும், திமுகவைச் சேர்ந்தவர்களே கூட முதல்வரிடம் இதுகுறித்துக் கூறியதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட அகதிகள் முகாம்கள் அவலம் குறித்து முதல்வருக்கே இருட்டடிப்பு செய்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பல்வேறு இதழ்கள் விரிவான செய்தி வெளியிட்டன. இதையடுத்தே அகதிகள் முகாம்களின் நிலை குறித்த விவரங்கள் ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தன.
செங்கல்பட்டு சிறப்பு முகாமை, அமெரிக்காவின் குவான்டநாமோ சிறைச்சாலையுடன் ஒப்பிடும் அளவுக்கு அங்கு மோசமான முறையில் அகதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வர்ணிக்கப்பட்டது.
அதேபோலத்தான் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள பிற சாதாரண முகாம்களும் அவல நிலையில் உள்ளன. உரிய கல்வி கிடைக்காமல் அகதிகளின் குழந்தைகள் பேரவலத்தில் உள்ளனர். வாழ்க்கைச் சூழலும் மகா மோசமாக உள்ள.
தற்போது இவை வெளிச்சத்திற்கு வந்து அரசின் கண்களைத் திறந்து விட்டுள்ளது. மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகே முதல்வருக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது என்றால், இதுதொடர்பான பணியைக் கவனிக்கும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
முதல்வர் இந்த விஷத்தில் துரிதமாகவும், அவசரமாகவும் செயல்பட்டு அகதிகளின் கண்ணீரைத் துடைத்தால், அது இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கும் சற்று நிம்மதியை அளிப்பதாக அமையும்.












Click it and Unblock the Notifications