என்.கே.கே.பி ராஜாவை பிடிக்க தனி்ப்படை-பாஸ்போர்ட் முடக்கம்
கோவை: நில அபகரிப்பு, ஆள் கடத்தல், அடிதடி என பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். இவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சாம்பசிவம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நில அபகரிப்பு, ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 30 பேர் மீது ஏற்கனவே சிபிசிஐடி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
பெருந்துறை சிவபாலனை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, அவரது இரண்டாவது மனைவி உமா மகேஸ்வரி உள்பட 6 பேர் திடீரென தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடி வருகிறோம்.
இதில், உமா மகேஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு வருகிறது. இப் பணி முடிந்ததும் அவற்றை முடக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
எம்.எல்.ஏ. ராஜாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம். ஆனால் எங்கு பதுங்கி இருக்கிறார் என தெரியவில்லை. விரைவில் பிடித்து விடுவோம்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது துப்பாக்கி லைசென்சை ரத்து செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications