பாஜக ஊழல் செய்தபோது திமுக எதிர்க்காதது ஏன்?-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதும் அல்லது மறுப்பதும் பாஜகவின் தலைமையைப் பொறுத்தது.
ஆனால், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் என்ற காரணத்தைக் காட்டி தன்னுடைய கொலை வழக்கிலிருந்து விடுபட முடியாது.
ஆனால், இது போன்ற காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா.
நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்தபோது, முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ராசா உட்பட திமுக அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? . இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை?. குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை?.
மௌனமாக இருந்ததன் விளைவாக, நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்தை இவர்கள் புரிந்ததாக ஆகாதா?.
2003ம் ஆண்டு டிசம்பர் வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக தான் ராசா சார்ந்த திமுக இருந்து வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து, அதாவது மே 2004லிருந்து, முதலில் தயாநிதி மாறன், பின்னர் ராசா என திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் தொலைத் தொடர்புத் துறையை வைத்திருந்தனர்.
5 ஆண்டு காலம் இந்தப் பதவியை வகித்த இந்த இருவரும் ஏன் இந்தப் பிரச்சனையை ஐந்து வருட காலத்தில் எழுப்பவில்லை?.
இந்த ஊழலை இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருப்பதன் மூலம், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றத்திற்கு இவர்கள் ஆளாக மாட்டார்களா?.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தாவிட்டால் தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா?.
தன் மீது நம்பிக்கை வைத்து, தனக்கு வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய அப்பாவி மக்கள் மீதும், இந்த நாட்டின் மீதும் ராசாவுக்கு துளிகூட அக்கறை இல்லையா?.
நான் ஏற்கெனவே கூறியது போல், ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுவதும் சட்ட விரோதமான மோசடி. இந்த தீய நோக்கத்தை உணர்ந்து கொண்டு அவர்களை தூக்கி எறிந்தால் அனைவருக்கும் நல்லது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications