Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் சட்ட சிக்கலை நோக்கி மகாராஷ்டிரம்!

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi and Pawar
மும்பை: அமைச்சர்களுக்கு அதிக லாபம் தரும் துறைகளை ஒதுககுவது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரசின் அசோக் சவான், துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரசின் சகன் புஜ்பல் ஆகியோரை இன்று தனித்தனியே சந்திக்கிறார் மகாராஷ்டிர மாநில ஆளுமர் ஜமீர்.

இன்று காலை அரை மணி நேர இடைவெளியில் இருவரையும் தன்னை வந்து சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது உடனடியாக புதிய அரசை அமைக்கும் முயற்சிகளை எடுக்குமாறும், சிறிய அமைச்சரவையாவது உடனடியாக பதவியேற்குமாறும் அவர் அறிவுறுத்தவுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை மட்டுமே யாருக்கு என முடிவு செய்து கொண்டுள்ள காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் யாருக்கு எத்தனை அமைச்சர்கள், யாருக்கு எந்தத் துறைகள் என்பதை இறுதி செய்வதில் கடும் மோதல் நடந்து வருகிறது.

குறிப்பாக காவல் துறையை கட்டுப்படுத்தும் உள்துறை, பணம் கொழிக்கும் நிதி, மின்சாரம், பொதுப்பணித்துறை, விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் இரு கட்சிகளும் கோருகின்றன. இந்தத் துறைகளை தங்களுக்கு ஒதுக்காவிட்டால் காங்கிரஸ் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இன்றுடன் கடந்த சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், இரு தரப்புமே விட்டுக் கொடுக்காமல் இருப்பதால் மாநிலத்தில் அரசியல் சட்ட சிக்கல் எழும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் அரசியல் சட்ட நிபுணர்களுடனும் ஜமீர் ஆலோசனைகள் நடத்தத் துவங்கியுள்ளார். இன்னும் சில நாட்களில் அரசு பதவியேற்காவிட்டால், சட்டசபையைக் கூட்டி அதிக இடங்களில் வென்றுள்ள கட்சியை (காங்கிரஸ்), முதலில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு ஜமீர் உத்தரவிட்டாக வேண்டும்.

இந் நிலையில் இன்றுக்குள் புதிய அரசு பதவியேற்காவிட்டால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கக கோரப் போவதாக பாஜக-சிவசேனா கூட்டணி எச்சரித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 82 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 62 இடங்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக-சிவசேனை கூட்டணி 91 இடங்களையே வென்றன.

மராத்தியில் தான் பதவியேற்க வேண்டும்: ராஜ்...

இதற்கிடையே மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மராத்தி மொழியில் மட்டுமே பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்றும், வேறு மொழிகளில் பதவி பிரமாணம் எடுத்தால் தனது கட்சியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

அவர் கூறுகையில், வேறு மொழியில் எவரேனும் பதவியேற்றால், எங்களது கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

கர்நாடகத்தில் கன்னட மொழியில் பேச முடியாத மராத்தி பேசும் எம்எல்ஏ ஒருவர் அந்த மாநிலப் பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர்களும் மராத்தி மொழி விஷயத்தில் இதேபோலச் செயல்படுவார்களா? என்று கேட்டார் ராஜ் தாக்கரே.

சட்டப் பேரவை நிகழ்ச்சி நிரலை இந்தியிலும் தயாரித்து வழங்க வேண்டும் என, மகாராஷ்டிர சட்டப்பேரவை புதிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு அசிம் அஸ்மி கோரிக்கை விடுத்ததையடுத்து, ராஜ் தாக்கரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பேரவை நிகழ்ச்சி நிரல் இந்தியில் வேண்டுமானால், அஸ்மி உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்றார் ராஜ் தக்கரே.

இந்தி பேசும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியே பிரபலமாகிவிட்ட ராஜ் தாக்கரே, அபு அசிம் அஸ்மியின் கோரிக்கையை வைத்து அடுத்த அரசியலுக்கு தயாராகிவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+