சேது திட்டம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக 4 வாரத்துக்குள் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் கால்வாயை தோண்ட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஜி.கே. வாசன் கோரிக்கை:
இந் நிலையில் கிருஷ்ணகிரியில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,
தமிழகம் மட்டும் இன்றி தேசிய நலன் கருதி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பச்செளரி கமிட்டி மக்களுடைய எண்ணங்களை அறிந்து, அதற்கேற்ப தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என்றார்.