ஆந்திர அமைச்சருக்கு நக்சல்கள் கொலை மிரட்டல்
ஹைதராபாத்: கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக கூறப்படும் ஆந்திர அமைச்சர் பில்லி சுபாஷ் சந்திரபோஸைத் தீர்த்துக் கட்டப் போவதாக நக்சலைட்டுகள் மிரட்டியுள்ளனர்.
பில்லி சுபாஷ்சந்திரபோஸ் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையறிந்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அவருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
இது தொடர்பாக அவர்கள் ராஜமுந்திரி அருகே மரேடுபில்லி என்ற இடத்தில் ஏராளமான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு சென்றனர்.
அதில், பில்லி சுபாஷ்சந்திரபோஸ் ஏழைகளின் நலத்திட்டங்களில் ஊழல் செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொகுசு ஆடம்பர காரில் பவனி வரும் அவரை விரைவில் மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்வோம். இதை யாராலும் தடுக்க முடியாது.
ஊழல் தலைவர்கள் சட்டத்தில் இருந்து வேண்டுமானால் தப்பி விடலாம். ஆனால் எங்களிடம் இருந்து தப்பவே முடியாது.
பில்லி சுபாஷ் சந்திரபோசை எப்படி சுட்டுக்கொல்வது என்று நாங்கள் பலமுறை ஒத்திகை பார்த்து விட்டோம். அவருக்கு நாங்கள் கொடுக்கும் தண்டனை இந்திய அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அவரை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.