அம்பானிகள் வழக்கு-2 நீதிபதிகள் விலகல்!
டெல்லி: கேஜி படுகை எரிவாயு விலை நிர்ணயம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் திடீரென அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முகேஷ் அம்பானிக்காக ஆஜராகும் சட்ட நிறுவனத்துடன் தனது மகள் தொடர்பு வைத்திருப்பதால் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திரன் அறிவித்திருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் இடம் பெற்றிருந்த பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கிலிருந்து நான் விடுபடுகிறேன். நேற்றுதான், முகேஷ் அம்பானி குழுமத்திற்காக சட்ட ஆலோசனைகளை வழங்கி வரும் நிறுவனத்துடன் எனது மகள் சம்பந்தப்பட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது. எனவே இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார் நீதிபதி ரவீந்திரன்.
கட்ஜுவும் விலகல்:
இந்த நிலையில் தற்போது இன்னொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்குகள் இருப்பதால் வழக்கிலிருந்து விலகுவதாக கட்ஜூ அறிவித்துள்ளார்.
இந்த வழக்குக்கான பெஞ்ச்சே கட்ஜு தலைமையில்தான் இயங்கி வந்தது. வழக்கை விசாரித்த கட்ஜூ தலைமையிலான பெஞ்ச் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், தற்போது இரு நீதிபதிகள் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications