பெரியாறு அணை தொடர்பான புதிய சட்டம்- கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் சூடு
முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரள அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கி விட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் புதிய சட்டம் இயற்றியது ஏன் என்பது குறித்து கேரளா விளக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், கேரளாவின் போக்கையும் கடுமையாக கண்டித்திருந்தது.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் கேரளத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், புதிய சட்டம் இயற்றியது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று கோபமாக கேட்டனர்.
இதையடுத்து கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செவ்வாய்க்கிழமையன்று பதில் மனுவைத் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.