சிறுமியின் ஆடை களைந்து புகைப்படம் எடுத்த ஆசிரியர்
லக்னோ: ஐந்தாவது வகுப்பு படிக்கும் பத்து வயது மாணவியின் உடைகளைக் களையச் சொல்லி, அவரை ஆபாசமாகப் படம் பிடித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார் உ.பியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.
அந்த ஆசிரியரின் பெயர் ராஜேஷ் சுக்லா. இவர் உ.பி. மாநிலம் மஹமூத்பூர் கிராமத்தில் உள்ள சுவாமி ஹரிஹார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இந்தப் பள்ளியில் 5வது வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை உடைகளைக் களையச் சொல்லி தனது செல்போன் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சம்பவம் நவம்பர் 3ம் தேதி நடந்தது.
அந்த மிருகத்திடமிருந்து மீண்ட சிறுமி, தனது பெற்றோரிடம் இதைக் கூறி அழுதுள்ளார். கொதிப்படைந்த சிறுமியின் தந்தை ராம் சிங் சவுகான் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், எனது மகளை காலியாக இருந்த ஒரு வகுப்பறைக்கு பாடம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்ற சுக்லா, எனது மகளின் உடைகளை களையுமாறு மிரட்டியுள்ளார். அதன் பின்னர் தனது செல்போனால் எனது மகளை புகைப்படம் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பந்திர் கூறுகையில், சுக்லா தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க வலை விரித்துள்ளோம். அவரது இருப்பிடம் குறித்துத் தெரிந்த பள்ளிக்கூட ஊழியர் ஒருவரைப் பிடித்துள்ளோம். அவர் மூலம் சுக்லாவைத் தேடி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கூட மேலாளர் ஹரிஹர் பாபா கூறுகையில், அந்த ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யுமாறு எங்களது பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் ஆவேசமடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த அவர்கள் பள்ளி மேலாளரின் அறையை அடித்து சூறையாடினர். சில ஊழியர்களையும் கோபத்தில் தாக்கினர்.