அசோக சக்கரத்தை எடுத்து விட்டு ராகுல்- ப.சி படம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆர்வக் கோளாறில் தேசியச் சின்னமான அசோக சக்கரத்தை எடுத்து விட்டு அதற்குப் பதில் ராகுல் காந்தியையும், கார்த்தியின் அப்பா ப.சிதம்பரத்தையும் போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின்போது, கூட்டம் கூட்டுவதற்காக நடனப் பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைத்து கலக்கினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். இதனால் பெரும் முனுமுனுப்பு எழுந்தது. காங்கிரஸ் மேலிடமும் இதை ரசிக்கவில்லை.
இந்த அட்டகாசம் நடந்து ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில் அடுத்து ஒரு அட்டகாசத்தை அரங்கேற்றியுள்ளனர் கார்த்தி சிதம்பரம் அன் கோவினர்.
இந்திரா காந்தியின் 25வது நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகளையும், போஸ்டர்களையும் போட்டுக் கலக்கியிருந்தனர் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள்.
அதில், இந்தியாவின் தேசியச் சின்னமான அசோக சக்கரத்திற்குப் பதில் ப.சிதம்பரத்தையும், ராகுல் காந்தியையும் போட்டு வைத்திருந்தனர். இந்த பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்து மக்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
காங்கிரஸ்காரர்களின் இந்த செயலை பெரும் பிரச்சினையாக்க தற்போது பாஜகவினர் கிளம்பியுள்ளனராம்.