18 மீனவர்களை விடுவிக்கக் கோரி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்
புதுக்கோட்டை: இலங்கை கடற்படை காடையர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 18 மீனவர்களையும் விடுவிக்கவும், மீட்கவும் கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் கடல் பகுதியில் கடந்த 2-ந் தேதி மீன்பிடித்து கொண்டு இருந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடாவடியாக சிறைபிடித்து சென்றனர். அவர்களுடைய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும்,வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.
18 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரை ஓரம் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன.
ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் ஆங்காங்கே 450 விசைப்படகுகளும், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் 300 விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். மேலும் இத்தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஐஸ் தயாரிக்கும் தொழிற்கூடம், வெல்டிங் பட்டறை, டீசல் பங்க், மீன்பிடி சாதன விற்பனை கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.