பத்திரிக்கையாளனாக நானும் போறேன் இலங்கைக்கு!-சரத்
சேலம்: ஒரு பத்திரிகையாளன் (?!) என்ற முறையில் நானும் விரைவில் இலங்கை செல்கிறேன் என்று சரத் குமார் கூறியுள்ளார்.
சேலத்தில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட
அக் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை தமிழக அரசு சிறப்பாக கவனிக்கிறது. சமீபத்தில்கூட அகதிகளின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கி உள்ளது. அமைச்சர்கள் முகாம்களை பார்வையிட்டு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேசமயம் இலங்கையில் முள்கம்பிகளுக்கு மத்தியில் அகதிகளாக அடைபட்டு உள்ள இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி அவர்களின் துயர் துடைக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை எம்.பி.க்கள் குழு பார்த்து வந்துள்ளது. அந்த குழுவில் தமிழ் ஆர்வம் கொண்ட எம்.பி.க்களும் சென்று வந்துள்ளனர்.
ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் நானும் விரைவில் இலங்கை செல்ல இருக்கிறேன். சமீபத்தில் இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் சென்னையில் பேசும்போது கூட பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
எனவே எங்கள் பத்திரிகையை சேர்ந்தவர்கள் இலங்கை அரசை அணுகி இருக்கிறார்கள். சாதகமான பதிலுக்குக் காத்திருக்கிறோம் என்றார்.