ராஜபக்சேவுக்கு பட்டாபிஷேகமா? வைகோ பாய்ச்சல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மதிமுக. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது. அதில் வைகோ பேசுகையில்,
கொட்டும் மழையில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மதிமுக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகும். இயக்கத்தின் எழுச்சி பயணம் நடைபெற்றபோதும், கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற நதிநீர் இணைப்பு விழிப்புணர்வு பிரசாரத்தின் போதும் இதுபோன்ற அனுபவத்தை கண்டோம்.
ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தான் அண்ணா முதன் முதலில் திமுகவை தொடங்கினார். தமிழர்களின் வாழ்வு தழைக்க ஜாதி பேதமற்ற சமுதாயம் தழைத்தோங்க அன்று அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டது.
மதிமுகவும் நெருப்பை தாண்டிய இயக்கம் தான். நம் மீது கொலைப்பழி சுமத்தப்பட்ட போது 5 பேர் தீக்குளித்தனர். அந்த தியாக நெருப்பில் வளர்ந்தது தான் மதிமுக.
தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் பாழாய்ப்போகும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு ஆகிய பிரச்சினைகளில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டது தான்.
ஈழத்தில் தமிழ் இனம் கொன்று குவிக்கப்பட்டது. ராஜபக்சேவின் கொலை வெறித்தாண்டவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களையும், நிதியும் கொடுத்து உதவியது.
ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதியில் பட்டாபிஷேகம் செய்துள்ளது மன்மோகன் அரசு. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருந்துள்ளார். இதை எதிர்கால தமிழகம் மன்னிக்காது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications