பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் முதல் பலி - கர்ப்பிணி பரிதாப மரணம்
கோவை: கோவையில் முதல் பன்றிக் காய்ச்சல் பலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார்.
தமிழத்திலேயே கோவையில்தான் பெருமளவிலானோர் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு 435 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 13 பேர் அனுமதிக்கப்பட்டு பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 6 பேர் மாணவ-மாணவிகள்.
இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த கென்னடி ராஜூ என்பவரின் மனைவி சரண்யா (22) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சரண்யாவுக்கு திடீரென்று தொண்டை வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி முதல் 2-ம் தேதி வரை புறநோயாளியாக சரண்யா சிகிச்சை பெற்றார். இருந்தாலும் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3-ந்தேதி சரண்யா அனுமதிக்கப்பட்டார். சரண்யாவின் ரத்தம், பரிசோதனைக்காக கோவையில் உள்ள தனியார் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரத்தப் பரிசோதனையில் சரண்யாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சரண்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
கர்ப்பிணியாக இருந்ததால் குழந்தையையும், தாயையும் காப்பாற்றுவதற்காக சரண்யாவின் வயிற்றில் உள்ள குழந்தையை வெளியே எடுக்க டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் நேற்று காலை சரண்யாவுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சரண்யா நேற்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
கோவையில் ஏற்பட்டுள்ள முதல் பன்றிக் காய்ச்சல் பலி இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications